×

கடையம் அருகே அரசு பஸ் மீது லாரி மோதி சிவகாசி பெண் பரிதாப பலி

கடையம், ஏப். 13: கடையம் அருகே அரசு பஸ் மீது லாரி மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.  சிவகாசியைச் சேர்ந்தவர் சங்கரி (55). தென்காசியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த இவர் பின்னர் அம்பையில் உள்ள கோயிலில் சுவாமிதரிசனம் மேற்கொண்டார். இதனிடையே நாகர்கோவிலில் இருந்து தென்காசிக்கு நேற்று மாலை  புறப்பட்ட அரசு பஸ்சில் சுமார் 50 பேர் பயணித்தனர். பழவூரைச் சேர்ந்த பழனி (52) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். அம்பை பகுதியில் வந்தபோது சிவகாசியைச் சேர்ந்த சங்கரி தென்காசி செல்ல அந்த பஸ்சில் பயணித்தார். கடையம் அடுத்த செக்போஸ்ட் பகுதியை தாண்டி சாலையோர திருப்பத்தில் சென்றபோது எதிரே தென்காசியில் இருந்து அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, அரசு பஸ்சின் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறிய அரசு பஸ், டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையில் இருந்து இறங்கி சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு ஓடி விபத்துக்கு உள்ளானது. இதில் பஸ்சில் இருந்து தூக்கிவீசப்பட்ட சங்கரி, பஸ்சின் முன்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  மேலும் இந்த விபத்தில் டிரைவர் பழனி உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த கடையம் இன்ஸ்பெக்டர் ரகுராஜன்  தலைமையிலான போலீசார், தென்காசி தீயணைப்பு நிலைய வீரர்களுடன் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து தப்பியோடிய டிப்பர் லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Tags : Sivakasi ,Kadayam ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து