மண்ணச்சநல்லூர், ஏப்.13:சமயபுரம்மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்தில் இரண்டாம் நாள் விழாவை முன்னிட்டு அம்பாள் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்பாளை வழிபட்டு செல்வது வழக்கம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கொண்டாடப்படும் பல முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை தேர் திருவிழா. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருந்ததால் சித்திரை தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் தேர் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் இந்நிலையில் அம்பாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். அதேபோல் இரண்டாம் நாளான நேற்று அம்பாள் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
வரும் 30ம் தேதி பத்தாம் திருநாளன்று திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியை முன்னிட்டு அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் கோயில் 2-ம் பிரகாரத்தை சுற்றி வந்து அபிஷேக மண்டபம் சேர்கிறார். இந்த நிகழ்ச்சிக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. வரும் 23-ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவத்தை முன்னிட்டு வசந்த மண்டபத்தில் அம்பாளுக்கு தெப்ப உற்சவ தீபாராதனை நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் அலுவலர்களும் பணியாளர்களும் செய்துள்ளனர்.