×

அயோத்தியாப்பட்டணம் அருகே குடிபோதையில் 3 பேரை தாக்கி கொலை மிரட்டல்

அயோத்தியாப்பட்டணம், ஏப்.13: அயோத்தியாப்பட்டணம் அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் அருகே வரட்டேரி காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது வீட்டின் முன்  நேற்று மதியம் 1 மணியளவில், வாலிபர்கள் சிலர் குடிபோதையில் நீண்ட நேரமாக நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.  இதையடுத்து ரமேஷ், அவர்களிடம் சென்று, ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பலை சேர்ந்த கிருபாகரன்(20), ரமேசை தகாதவார்த்தைகளால் திட்டியுள்ளார்.
அப்போது அங்கு வந்த ரமேஷின் அண்ணன் மோகன்ராஜ், சித்தப்பா மகன் சௌந்தர்ராஜன் ஆகியோர், கிருபாகரனிடம்,  எதற்காக தகாத வார்த்தைகளில் பேசுகிறாய் என கேட்டுள்ளனர்.  

இதனால் ஆத்திரமடைந்த கிருபாகரன், அவருடன் இருந்த நண்பர்கள் 6 பேரும் சேர்ந்து ரமேஷ், மோகன்ராஜ் மற்றும் சௌந்தர்ராஜன் ஆகிய மூன்று பேரையும் சராமாரியாக தாக்கியதுடன்,  கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த 3 பேரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பொதுமக்கள் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் தலைமையிலான போலீசார், உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, போதையில் இருந்த கிருபாகரன், அவரது நண்பர்களான கோகுல்நாத்(21), ரவிச்சந்திரன்(22) ஆகிய 3பேரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய கிருபாகரனின் 4 நண்பர்களை தேடி வருகின்றனர்.

Tags : Ayodhya ,
× RELATED சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமான சேவைகள் ரத்து