×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை

கிருஷ்ணகிரி, ஏப்.13: கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா 3596 மெ.டன், டி.ஏ.பி 2444 மெ.டன், பொட்டாஷ் 1455 மெ.டன், காம்பளக்ஸ் 7480 மெ.டன், தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து உர விற்பனை நிலையங்களிலும், கடந்த ஆண்டு விலையிலேயே தற்போதும் டி.ஏ.பி, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்பளக்ஸ் உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என மத்திய உரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் பராமரிக்க வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்யும் போது உரிய ரசீது வழங்க வேண்டும். இருப்பு பதிவேட்டில் உரங்களின் இருப்பு விவரங்கள் சரியாக பராமரிக்க வேண்டும். அதிக விலைக்கு உரம் விற்றாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மீறுபவர்களின் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Krishnagiri district ,
× RELATED கழுத்தை அறுத்து மனைவியை கொன்ற கணவன் கைது