×

டெல்டா மாவட்டத்தில் 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்

தஞ்சை,ஏப்.12: தஞ்சை மாவட்டத்தில் 24 மணி நேரம் முன்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா மாவட்ட விவசாய பாசனத்துக்கு கடந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்தாண்டு 6 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இலக்கை தாண்டி 7.71 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், உரிய நேரத்தில் கொள்முதல் நிலையங்களில் நெல்கொள்முதல் செய்வதில் தொய்வு ஏற்பட்டது. அதேபோல, சம்பா சாகுபடியில் கடந்த ஜனவரி மாதம் அறுவடை நேரத்தில் பெய்த தொடர் மழையால் மகசூல் பாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, குறுவை, சம்பாவில் ஏற்பட்ட இழப்புகளை ஓரளவாவது சரிக்கட்டலாம் எனக்கருதிய விவசாயிகள் பம்புசெட் மூலம் கோடை சாகுபடி மற்றும் முன்பட்ட குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர். இதில், கோடை சாகுபடிக்கு மும்முனை மின்சாரம் 12 மணி நேரம் வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே, சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, ஏப்.1ம் தேதி முதல் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இதை தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது கோடை சாகுபடி மற்றும் முன்பட்ட குறுவை சாகுபடியாக 40 ஆயிரம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 35 ஆயிரம் ஏக்கர் என 1 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் அறிவித்தபடி கடந்த 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் சீராக மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால், தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற 6ம் தேதிக்கு பிறகு தேவைக்கேற்ப மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் பயிர்கள் கருகத் தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பால் எங்களுக்கு 6 நாட்கள் மட்டுமே 24 மணிநேர மும்முனை மின்சாரம் தொடர்ச்சியாக கிடைத்தது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 6ம் தேதிக்கு பின் 12 மணி நேரத்துக்குக்கூட மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை. எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் எனத்தெரியவில்லை.

மேலும், குறைந்த அழுத்த இருமுனை மின்சாரம் காரணமாக மோட்டார்கள் பழுதாகி வருகின்றன. இதற்கிடையே, தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், போதிய நீரின்றி பயிர்களும் கருகி வருகின்றன. எனவே மீண்டும் தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...