×

சாயர்புரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு


ஏரல், ஏப்.12: சாயர்புரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு தினகரன் செய்தி எதிரொலியால் உடனடியாக சீரமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாயர்புரம் மெயின் பஜார் மகளிர் பள்ளி அருகில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக சென்று வந்தது. மங்கலகுறிச்சி தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு சாயர்புரம் வழியாக குழாய்கள் பதித்து தூத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதேபோல் இவ்வழிதடம் வழியாக சாயர்புரம் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் செல்லும் குழாயும் செல்வதால் இதில் எந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியாமல் அதிகாரிகள் சீரமைக்காமல் அப்படியே போட்டுவிட்டனர். இதனால் காங்கிரஸ் பிரமுகர் அமிர்தராஜ் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் பெருக்கெடுத்து சென்ற தண்ணீரில் குளியல் நடத்தி நூதன போராட்டத்தை நடத்தினார். மேலும் சாலையில் தேங்கும் தண்ணீரால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் நிலை ஏற்பட்டு இருப்பதாக தினகரன் நாளிதழில் கடந்த 9ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து சாயர்புரம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்தார். பேரூராட்சி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Sawyerpuram ,
× RELATED சாயர்புரத்தில் காங். வேட்பாளர்களுக்கு அங்கீகார கடிதம் வழங்கல்