×

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெண் எம்எல்ஏ ஆவேசம் அரசியல் சூனியக்காரர் அமைச்சர் சம்பத்

கடலூர், ஏப். 12:   அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பண்ருட்டி தொகுதி சத்யா பன்னீர்செல்வம் எம்எல்ஏ மற்றும் அவரது கணவரும், பண்ருட்டி முன்னாள் நகர்மன்ற தலைவருமான பன்னீர்செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் ஒரு தவறும் செய்யாத எங்களை போன்ற உண்மையான அதிமுக விசுவாசிகளை கட்சி இழந்து கொண்டே போனால் கழகத்தின் நிலை?. தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பிற்கு பிறகு நாங்கள் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகி அறிக்கை வெளியிட்டு விட்டோம். அதன்பிறகு வேட்பாளர் அறிவிப்பில் இருந்து தேர்தல் முடியும் வரை பண்ருட்டி சட்டமன்ற தொகுதியிலேயே இல்லை.

 ஒவ்வொரு கோயிலாக இறைவனை தரிசிக்க இறை சுற்றுலா மேற்கொண்டிருந்தோம். நாங்கள் ஊரிலே இல்லாத நிலையில் கட்சிக்கு எதிராகவோ, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவோ எப்படி தேர்தல் பணியாற்ற இயலும். நாங்கள் எந்த ஒரு செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை என்பதை பண்ருட்டி தொகுதி முழுக்க உள்ள அதிமுக  நிர்வாகிகள், தொண்டர்கள், பண்ருட்டி தொகுதி மக்கள் உள்பட அனைவருக்குமே தெரியும். இதற்கு நான் வணங்கும் ஈசனும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் சாட்சி. இந்நிலையில் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகிய எங்களை அதிமுக வேட்பாளரை எதிர்த்தும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக அபாண்டமான பொய்யான குற்றச்சாட்டை எங்கள் மீது சுமத்தியதுடன் எங்களுடன் நகர, ஒன்றிய செயலாளர்கள் உள்பட நால்வரை நீக்குவதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்து இருப்பது மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது.

கடலூர் அமைச்சர் சம்பத், சொல்படி வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உளவுத்துறையை தன் கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவல்துறை அறிக்கையை கேட்டு பெற்று இருந்தாலே உண்மை தெரியும். இந்த அறிவிப்பால் எங்கள் மீது பொய்யான பழி சுமத்தப்பட்டதோடு, எங்களை போன்ற உண்மையான விசுவாசிகளின் மனதை புண்படுத்தியுள்ளார்கள். இதற்கு காலம்தான் பதில் சொல்லும். இந்த அறிவிப்பை அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உண்மையாகவே கட்சி விரோத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அரசியல் சூனியகாரர்களான கடலூர் அமைச்சர் சம்பத், வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோரை நான் வணங்கும் ஈசனும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் ஒருபோதும் மன்னிக்காது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags : MLA ,AIADMK ,
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்