×

சிவகங்கை மாவட்டத்தில் சாலை விபத்து மரணங்கள் அதிகரிப்பு 3 மாதங்களில் 250 விபத்துகள்

சிவகங்கை, ஏப்.10: சிவகங்கை மாவட்டத்தில் சாலை விபத்து மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள அபாயகரமான வளைவுகள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவைகளால் விபத்துகள் நடக்கின்றன. 2015ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 952 சாலை விபத்துகள் நடந்தன. இந்த விபத்துகளில் 261 பேர் மரணமடைந்தனர். 2016ம் ஆண்டு மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 322 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் ஆயிரத்து 604 பேர் காயமடைந்துள்ளனர். 333 பேர் மரணமடைந்துள்ளனர். 2017ம் ஆண்டு மொத்தம் ஆயிரத்து 112 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 295 பேர் மரணமடைந்துள்ளனர். 2018ம் ஆண்டில் 853 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 244 பேர் மரணமடைந்துள்ளனர். சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2019ம் ஆண்டு 977 சாலை விபத்துகளில் 265 மரணமடைந்துள்ளனர். 682 பேர் காயமடைந்துள்ளனர். 2020ம் ஆண்டில் 804 சாலை விபத்துகளில் 146 பேர் மரணமடைந்தனர். கடந்த சில ஆண்டுகளில் விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக 300ல் இருந்தது. 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியிருந்த நிலையில் 2019ம் ஆண்டைவிட விபத்து மரணங்கள் குறைந்தன. இந்த ஆண்டு விபத்துகள் மற்றும் விபத்து மரணங்கள் அதிகரித்துள்ளன.
இந்த ஆண்டில் இதுவரை 250க்கும் மேற்பட்ட விபத்துகளில் 80க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். டூவீலர், கார், வேன், கனரக வாகனங்கள் உள்ளிட்டவைகள் மோதியது மற்றும் கட்டுப்பாட்டை இழந்து மரம், தடுப்புச்சுவரில் மோதியது உள்ளிட்ட சம்பவங்களால் இந்த விபத்துகள் நடந்துள்ளன. கனரக வாகனங்களான பஸ், லாரி உள்ளிட்டவைகள் அதிவேகத்தால் விபத்தில் சிக்கி ஏராளமானோர் காயமடையும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. சாலைகளில் நடந்து சென்றவர்கள், டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றவர்களும் விபத்தில் மரணமடைந்துள்ளனர். மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்புவனம், மானாமதுரை பகுதிகள், மதுரை, தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை, காளையார்கோவில் பகுதிகள், மதுரை, காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் விபத்துகள் அதிகம் நடந்துள்ளன. டூவீலர் விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களில் 90 சதவீதம் பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர்.
போலீசார் தெரிவிக்கையில், வாகனங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதனால் விபத்தின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. சாலை பாதுகாப்பு, விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
 டூவீலர் விபத்துகளில் மரணம் அடைந்தவர்களில் 95 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கியவர்களாவர். கார் உள்ளிட்ட வாகனங்களில் அதிகம் வேகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தற்போது அதிகரித்துள்ளது என்றனர்.

Tags : Sivagangai district ,
× RELATED லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து