×

ஆரல்வாய்மொழி அருகே மின் கம்பத்தில் கார் மோதி சிறுமி பலி

ஆரல்வாய்மொழி, ஏப்.10: கொல்லங்கோடு அடுத்த அடைக்காகுழி கல்வெட்டான்குழி பகுதியை  சேர்ந்தவர் ஷிஜின்போஸ் (34). மதுரையில் உள்ள உறவினர் ஒருவருக்கு உடல் நிலை  சரியில்லாமல் உள்ளதால், அவரை பார்ப்பதற்காக ஷிஜின் போஸ் நேற்று முன்தினம் இரவு காரில்  மதுரை புறப்பட்டார். அவருடன் அவரது மகள் டியோனா (7) மற்றும் உறவினர்கள்  கோபி (57), வசந்தா (55), உன்னிகிருஷ்ணன் (33), ரத்தினபாய் உள்பட 5 பேர்  சென்றனர்.
நேற்று அதிகாலை முப்பந்தல் அருகே கார்  சென்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து,  ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இதில் மின்  கம்பம் நொறுங்கி விழுந்தது. காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி  வெளியே வரமுடியாமல் தவித்தனர். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள்,  காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

நெஞ்சாலை ரோந்து  போலீசார், ஆரல்வாய்மொழி போலீசார் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.  காருக்குள் காயத்துடன் இருந்தவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இதில் டியோனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது  நேரத்தில் உயிரிழந்தார். ஆரல்வாய்மொழி போலீசார் அவரது உடலை பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தால் நாகர்கோவில் - திருநெல்வேலி  தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Aralvaymozhi ,
× RELATED ஆரல்வாய்மொழியில் தேவசகாயம் புனிதர்...