×

இடிந்தகரையில் கடலில் மூழ்கி பலியான மீனவர் குடும்பத்திற்கு இன்பதுரை எம்எல்ஏ ஆறுதல்

பணகுடி, ஏப்.10: இடிந்தகரையில் கடலில் மூழ்கி பலியான மீனவர் குடும்பத்திற்கு இன்பதுரை எம்எல்ஏ ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். ராதாபுரம் தாலுகா இடிந்தகரை வடக்கு அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பன் மகன் ஸ்டீபன்ராஜ் (51). இவர் சம்பவத்தன்று நாட்டுப்படகில் சக மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென எழுந்த ராட்சத அலைகளால் நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக கடலுக்குள் தவறி விழுந்து மூழ்கினார். தகவலறிந்த கூடங்குளம் கடலோர காவல்படையினர் விரைந்து சென்று ஸ்டீபன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனையறிந்த இன்பதுரை எம்எல்ஏ, மீனவர் ஸ்டீபன்ராஜ் வீட்டிற்கு சென்று மனைவி செல்வி, மகன் ஜார்ஜ், மகள்கள் சுமித்ரா, அனிதா, ரஞ்சிதா, சபீனா ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அரசிடமிருந்து நிதிஉதவிகளை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக  இன்பதுரை எம்எல்ஏ உறுதியளித்தார். மேலும் சொந்த பணத்திலிருந்து மீனவர் குடும்பத்திற்கு நிதி உதவியும் அளித்தார். அவருடன் ராதாபுரம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா உடனிருந்தார்.

Tags : Inbathurai ,MLA ,Idinthakarai ,
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...