×

குடந்தை மருத்துவமனையில் தடுப்பூசி போட குவிந்த மக்கள் பணியாளர்கள் இல்லாததால் அவதி

கும்பகோணம், ஏப்.10: கும்பகோணம் பகுதியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று அச்சத்தால் தடுப்பூசிபோட மருத்துவ மனையில் அதிக அளவில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். ஆனால் போதிய மருத்துவப்பணியாளர்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.  கும்பகோணம் பகுதியில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தடுப்பூசி போட மருத்துவமனையில் பொதுமக்கள் குவிந்தனர்.கடந்தாண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் முதன்முதலாக கும்பகோணத்தில் உள்ள ஒருவருக்கு தான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மாவட்டத்திலேயே அதிக அளவாக கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு தான் தொற்று அதிகம் ஏற்பட்டது.இந்நிலையில் கொரோ னா தொற்று குறைந்திருந்த நிலையில், கடந்த மாதம் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கும், ஆசிரியைகளுக்கும் பரவிய தொற்று, அடுத்தத்து மூன்று பள்ளிகள், இரண்டு கல்லூரியிலும் பரவி பெருமளவில் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று அதிகளவில் கும்பகோணத்தில் பரவிவருவதால் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தற்போது 200க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும், கும்பகோணம் ஜகநாத பிள்ளையார் கோயில் தெருவில் கடந்த ஒரு வாரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதே போல் காசிவிஸ்வநாதர் கோயில் தெருவிலும் பாதிப்பு அதிகரித்துள்ளதால், அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, நகராட்சி நிர்வாகத்தில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோ னா தொற்று அதிகம் பரவுவதால், அதிலிருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசியை போட்டுக்கொள்ள பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதன்படி கும்பகோணம் காரனேசன் நகராட்சி மருத்துவமனையில் நேற்று காலை 9 மணி முதல் 100க்கும் மேற்பட்டவர்கள் முதலாம்கட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்தனர். அதே போல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும், இரண்டாம்கட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் ஏராளமானோர் வந்ததால் மருத்துவமனை வளாகம் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.  ஆனால் போதிய மருத்துவப்பணியாளர்கள் இல்லாததால், பொதுமக்கள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் வெகுநேரம் காத்திருந்தனர். பின்னர் மருத்துவ செவிலியர்கள் முற்பகல் 11 மணிக்கு வந்து தடுப்பூசிபோடும் பணியில் ஈடுபட்டனர். கும்பகோணம் பகுதியில் அதிகரித்து வரும் கொரோனாவால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டும் நிலையில், நகராட்சி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவப்பணியாளர்களை நியமிக்க வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kuttan Hospital ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு