×

துபாய் நாட்டில் இறந்த வாலிபரின் உடலை மீட்டு தர வேண்டும் கலெக்டரிடம் பெற்றோர் மனு

திருவையாறு, ஏப்.10: துபாய் நாட்டில் இறந்து போன மகன் உடலை மீட்டு தர வேண்டும் என்று தஞ்சை கலெக்டருக்கு வாலிபரின் பெற்றோர் மனு அளித்துள்ளனர். திருவையாறு அடுத்த செம்மங்குடி இலுப்பைதோப்பு தெருவை சேர்ந்தவர் முருகேசன்(50). கூலித்தொழிலாளி. இவருக்கு மகேஸ்வரி 48) என்ற மனைவியும், அமுதா (28), மோகனா(26) என்ற இரண்டு மகள்களும், அருண்குமார் (22) என்ற மகனும் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. அருண்குமார் கேட்டரிங் படித்துவிட்டு துபாய் நாட்டில் உள்ள ஷார்ஜாவில் கடந்த 13.11.2019 முதல் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி தொலைபேசியில் அருண்குமார் தனது பெற்றோருடன் பேசினார். அதன்பிறகு 6ம் தேதி மதியம் 12.30 மணிக்கு துபாயிலிருந்து கைப்பேசி மூலமாக உனது மகன் அருண்குமார் இறந்துவிட்டார் என செய்தியை சொல்லிவிட்டு கைப்பேசியை நிறுத்திவிட்டனர். இந்த செய்தியை கேட்ட அவர்கள் அதிர்ச்சியடைந்து புலம்பி கதறி அழுதனர். என்ன செய்வது என தெரியமால், மாவட்ட கலெக்டரிம் கடந்த 8ம் தேதி மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:ஷார்ஜாவில் என் மகன் இறந்து விட்டான் என்று செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். அவன் எப்படி இறந்தான் என்ற விவரம் தெரியப்படுத்தவில்லை. எனவே இறப்புக்கான காரணத்தை விசாரித்தும், மகனின் உடலை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். செம்மங்குடியில் அருண்குமார் இறந்த செய்தியை கேட்டு உறவினர்கள், பெற்றோர்கள் அழுதுகொண்டு சோகத்துடன் உள்ளனர். இதனால் செம்மங்குடி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Tags : Collector ,Dubai ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...