கரூர், ஏப்.10: கரூர் இரட்டை வாய்க்காலில் அமைக்கப்பட்டு வரும் நடைமேடை பணி மந்தமாக நடப்பதால் சாக்கடை நீர் தேங்கி கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. எனவே பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட அன்சாரி தெரு வழியாக செல்லும் இரட்டைவாய்க்காலை சீரமைத்து, அதன் மீது பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி முழுமை பெறாத காரணத்தால் சாக்கடை நீர் தேங்கி பகுதி முழுதும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, இரட்டை வாய்க்கால் மேல்புற பகுதியில் நடைபெற்று வரும் நடைமேடை அமைக்கும் பணியை முழுமையாக முடித்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு நடைமேடை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.