×

வியாபாரிகள், விவசாயிகள் கோரி்க்கை ஏற்பு அறந்தாங்கி- போடிக்கு அரசு பேருந்து துவக்கம்

அறந்தாங்கி, ஏப்.10:  அறந்தாங்கி பகுதியில் இருந்து தேனி மாவட்டத்திற்கு ஏராளமான தொழிலாளர்கள் வேளாண் பணிகளுக்காகவும், வியாபாரிகள் ஏலக்காய் மற்றும் வாசனை பொருட்கள், பூக்கள், காய்கறிகள் கொள்முதல் செய்வதற்காகவும் சென்று வருகின்றனர். தற்போது அறந்தாங்கியில் இருந்து தினசரி அதிகாலை நேரத்தில் தேனி மாவட்ட எல்லையான குமுளிக்கு அரசு பேருந்து சென்று வருகிறது அதிகாலை நேரத்தில் குமுளிக்கு பேருந்து புறப்படும் நிலையில், அறந்தாங்கியில் இருந்து மாலை நேரத்தில் தேனி மாவட்டத்திற்கு அரசு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என வியாபாரிகள், விவசாயத் தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக மதுரை கோட்டத்தின், திண்டுக்கல் மண்டலத்தின் சார்பில் தேனி மாவட்டம் போடியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு நேரடி அரசு பேருந்து வசதி தொடங்கப்பட்டுள்ளது.

தினசரி காலை 9.15 மணிக்கு தேனி மாவட்டம் போடியில் புறப்படும் இந்த பேருந்து தேனி, பெரியகுளம், வத்தலக்குண்டு, திண்டுக்கல், மணப்பாறை, விராலிமலை, புதுக்கோட்டை வழியாக அறந்தாங்கிக்கு மாலை 4 மணிக்கு வந்து சேரும். பின்னர் அறந்தாங்கி கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 4.40 மணிக்கு புறப்படும் இந்த பேருந்து போடி பேருந்து நிலையத்திற்கு சுமார் இரவு 11 மணிக்கு சென்றடையும். இதன்மூலம் அறந்தாங்கி பகுதி மக்கள் தேனி மாவட்டத்திற்கு செல்வதற்கு பல பேருந்துகள் மாறி,மாறி செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Aranthangi- Government ,
× RELATED திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை...