×

அரசுக்கு கோரிக்கை கொரோனா தடுப்பு நடவடிக்கையால் முன்னதாக நடந்தது நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புதுக்கோட்டை, ஏப்.10: கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் 12ம் தேதி நடைபெற இருந்தது முன்னதாக நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா பூச்சொரிதல், கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம்.அதேபோல் இந்த ஆண்டு கடந்த 28ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 4ம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் முத்துமாரியம்மன் அன்னம், ரிஷப, குதிரை, சிம்மம் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்ந்து நேற்று முன்தினம் பொங்கல் விழாவும், பாரி வேட்டை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் பல்வேறு சாமி வேடங்களை அணிந்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப். 12-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 10ம்தேதி முதல் அனைத்து திருவிழாக்கள் மதம் தொடர்புள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நார்த்தாமலை தேர்திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது. இதற்காக தேர்திருவிழா அன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் அதனையும் ரத்து செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் விழா கமிட்டியாளர்கள்,ஊர் பொதுமக்கள், முக்கியஸ்தர்கள், நேற்று இரவு திடீரென ஆலோசனை நடத்தினர். இதில் நேற்று தேர் தேர்திருவிழா நடத்த முடிவு செய்தனர்.இதையொட்டி நேற்று காலையில் முத்துமாரியம்மனுக்கு மஞ்சள், விபூதி, சந்தனம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக புதுக்கோட்டை, அன்னவாசல், கீரனூர், நார்த்தாமலை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பறவை காவடி எடுத்தும், அலகு குத்திக்கொண்டு கோயிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல கரும்பால் தொட்டில் கட்டி குழந்தைகளை அதில் வைத்து கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதைதொடர்ந்து மாலை 3 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்து மாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க கம்பீரமாக வீதியில் பவனி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்தனர். பின்னர் 4- 30மணிக்கு தேர் கோயில் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தேரோட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள், ஆன்மிக சான்றோர்கள், நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர். சுகாதாரத்துறையின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.பின்னர் சுகாதாரத்துறையினர் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

Tags : Northamalai Muthumariamman Temple Therottam ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது