×

கலெக்டர் அறிவுறுத்தல் ரமலான் மாத நோன்பு 14ம் தேதி துவக்கம் பள்ளிவாசல்கள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதியளிக்க வேண்டும்

புதுக்கோட்டை, ஏப்.10: ரமலான் மாத நோன்பு 14ம் தேதி துவங்குவதையொட்டி பள்ளிவாசல்கள் இரவு 10 மணிவரை செயல்பட அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு முஸ்லிம்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசு வெளியிட்ட கொரோனா கட்டுப்பாடு அறிவிப்பில், மத வழிபாடு செய்ய இரவு 8 மணி வரை அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்தில் 30 நாட்களும் தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை கூடுதலாக தொழப்படும் என்பதால் 30 நாட்களுக்கு மட்டும் கூடுதலாக 10 மணி வரை தொழுகை நடந்த அனுமதிக்க வேண்டும் என முஸ்லிம் மக்கள் சார்பில் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வரும் 14ம்தேதி ரமலான் நோன்பு ஆரம்பமாகிறது. 30நாட்கள் நோன்புக் காலத்தில் 5 வேளை தொழுகையைத் தாண்டி கூடுதலாக இரவு 9 மணி முதல் 10 மணிவரை தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை நடப்பது வழக்கம். இந்நிலையில் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடு அறிவிப்பில் மத வழிபாட்டுக்கான நேரம் இரவு 8 மணி வரை மட்டும் அனுமதி என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த 30 நாட்கள் முஸ்லிம் மக்கள் தராவீஹ்தொழுகை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல்,வயலோகம்,பெருமநாடு, குடுமியான்மலை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் காரணமாக அதிகரித்து வரும் பாதிப்பினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஏப்.10ம்தேதி (இன்று) முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.புனித ரமலான் மாதம் வரும் 14ம்தேதி தொடங்க விருக்கும் நிலையில்,இந்தக் கட்டுப்பாட்டினால் ரமலான் மாத இரவுத் தொழுகையை முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகும்.

கடந்த ஆண்டு முழு ஊரடங்கு காரணமாகப் பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டன. புனித ரமலானில் தராவீஹ் எனப்படும் இரவு நேரத் தொழுகையைப்பள்ளி வாசல்களில் நிறைவேற்ற முடியாமல் முஸ்லிம்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே, முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்கள் இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 10 மணி வரை செயல்படத் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது