×

துறையூர், முசிறி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு அதிகாரிகள் சீல்

துறையூர், ஏப்.8: துறையூர், முசிறி தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் துறையூர், முசிறி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்றிரவு 7 மணிக்கு பின்னர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீஸ் காவலுடன் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ள துறையூர் அடுத்த கண்ணனூர் இமயம் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்கல்லூரி வளாகத்தின் 2வது மாடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.அங்கு மிக பாதுகாப்பான முறையில் அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அப்பகுதிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் நேற்று மதியம் வந்து சேர்ந்தது. அதன் பின்னர் தேர்தல் பொது பார்வையாளர் சுரேந்திரராம் முன்னிலையில் சப்-கலெக்டர் ஜோதிசர்மா, துறையூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து வடிவேல் தலைமையில் வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைக்கு சீல் வைத்தனர். வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பகுதியில் அனுமதி இல்லாமல் யாரும் செல்லக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்டபோது போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் இருந்தனர்.

Tags : Thuraiyur ,Muziri ,
× RELATED முசிறியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் காவல்துறை அறிவுறுத்தல்