×

முத்துப்பேட்டையில் சேதமடைந்த பைபாஸ் இணைப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை

முத்துப்பேட்டை, ஏப்.8: முத்துப்பேட்டை பேரூராட்சி 17வது வார்டில் சேதமடைந்த பைபாஸ் இணைப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை பேரூராட்சி 17வது வார்டு மன்னை சாலையிலிருந்து பிரிந்து தெற்குகாடு பகுதியை கடந்து பைபாஸ் சாலையில் இணையும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த சாலையில் ஏராளமான குடியிருப்புகள், காலனி அடுக்குமாடி வீடுகள் உள்ளன.இச்சாலை வழியாக தெற்குகாடு மாரியம்மன் கோவில் பகுதிக்கும், அதேபோல் கீழநம்மங்குறிச்சி, மேலநம்மங்குறிச்சி, மங்கலூர் ஆகிய பகுதிக்கு செல்லும் மக்கள் கோவிலூர் பைபாஸ் சாலையில் போகாமல் இந்த சாலை வழியாக செல்வது வழக்கம். இதன் அருகே வனத்துறை அலுவலகம், தனியார் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாணவிகள் விடுதி, பேருந்து நிறுத்தம் ஆகியவை உள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பேரூராட்சி சார்பில் இந்த சாலை சீரமைப்பு பணிகள் நடந்தது, போதிய தரமில்லாமல் சாலை போடப்பட்டதால் சில மாதங்களில் ஜல்லிகள் பெயர்ந்தன. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் பெய்த மழைக்கு சாலை முழுவதும் சேதமாகி பள்ளமாக மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்று வரும் நிலை இருந்து வருகிறது. இரவில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆகவே இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில்:போதிய தரமில்லாமல் போடப்பட்ட இந்த சாலை தற்பொழுது மக்கள் பயன்படுத்த முடியாதளவில் மாறிவிட்டது. இப்பகுதி மக்கள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் சாலையை சீரமைத்து தரவேண்டும் என்றனர்.

Tags : Muthupet ,
× RELATED முத்துப்பேட்டை அருகே கலைத்திருவிழா...