×

விடுப்பு வழங்காமல் துப்புரவு பணியாளர்களுக்கு தேர்தல் நாளில் பணி

திருவாரூர், ஏப். 8: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, கூத்தாநல்லூர் மற்றும் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தமிழ்நாடு தொழிலாளர் துறை ஆணையர் அறிவிப்பிற்கு மாறாக தேர்தல்நாளில் விடுப்பு வழங்காதது குறித்து நடவடிக்கை எடுக்க சிஐடியூ தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரு மான சாந்தாவிற்கு சிஐடியூ தொழிற் சங்கத்தின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் முருகையன் மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் துறை ஆணையர் அறிவிப்பிற்கு மாறாக நேற்றுமுன்தினம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மன்னார்குடி நகராட்சியில் துப்புரவு நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கும் 184 தொழிலாளர்களும், கூத்தாநல்லூர் நகராட்சியில் துப்புரவு நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கும் 82 தொழிலாளர்களும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் துப்புரவு நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர் களாக வேலை பார்க்கும் 79 தொழிலாளர்களையும் நகராட்சி ஆணையர்கள் தேர்தல் நாளன்று வேலை செய்ய உத்தரவிட்டுள்ளனர். எனவே தேர்தல் சட்ட நடவடிக் கையின் படி மூன்று நகராட்சி நிர்வாகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவாரூர் நகராட்சி (பொ) ஆணையரை நேரில் சந்தித்து தேர்தல் ஆணைய உத்தரவுப்படி விடுப்பு வழங்க மாவட்ட சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்தோம். அதனால் திருவாரூரில் மட்டும் விடுப்பு கிடைத்திருக்கிறது.
திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் 125 பேருக்கு 1.4.2020 ல் மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினக்கூலி உத்தரவின்படி ரூ.385 கிடைக்கப்பெறாமல் கடந்த 12 மாதங்களாக தினக்கூலியாக ரூ.290 மட்டும் பெற்று வருகிறார்கள். இதனால், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ . 43.34 லட்சத்தை 125 ஒப்பந்த தொழிலாளர்கள் இழந்துள்ளனர். எனவே, இழந்த பணத்தை பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் வலியுறுத்துவதாக மனுவில் முருகையன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ