×

தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் முறையான ஏற்பாடு இல்லாததால் வாக்களிக்கவில்லை

பேராவூரணி, ஏப்.8: 100 சதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் வாக்களிக்க முறையான ஏற்பாடு செய்யாததால் வாக்களிக்க முடியாமல் இருந்து வருகின்றனர். குறிப்பாக முதல்முறையாக வாக்களிக்க தயாராக இருந்த தன்னார்வலர்கள், அதிகாரிகளின் குளறுபடி காரணமாக இதுவரை வாக்களிக்க முடியாமல் உள்ளனர். எனவே, தங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 2 ஆயிரத்து 886 வாக்குச் சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா 2 தன்னார்வலர்கள், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மூலம் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் வாக்குச் சாவடிக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்துதல், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து, கையுறை வழங்குதல், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தல், முதியோர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். இதில் ஆண், பெண் இருபாலரும் பணியாற்றினர்.

இவர்களுக்கு அரசின் சார்பில் 3 வேளை உணவு, ஊக்கத்தொகை ரூ. 250 மற்றும் கலெக்டர் அலுவலகம் மூலம் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தைப் பொறுத்தவரை, இந்த தன்னார்வலர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி அனைவரது பாராட்டையும் பெற்றனர். இந்நிலையில், பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் தன்னார்வலர்களாகப் பணியாற்றிய 100க்கும் மேற்பட்டோருக்கு தபால் வாக்குகள் (படிவம் 12 - ஏ) வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் வாக்களிக்க முடியாமல் இருந்து வருகின்றனர். இதுகுறித்து தன்னார்வலர்களாக பணியாற்றியவர்கள் கூறியது, முதல் முறையாக வாக்களிக்க தயாராக இருந்த நாங்கள், தேர்தல் பணியில் தன்னார்வலர்களாக எங்களை ஈடுபடுத்திக் கொண்டோம். நாங்கள் வசிக்கும் பகுதியில் இல்லாமல், அதே தொகுதியில் வேறு வாக்குச்சாவடிகளில் பணியாற்றியதால், எங்களால் நேரடியாக வாக்களிக்க முடியவில்லை. எங்களுக்கு தபால் வாக்குகள் அனுமதிக்கப்பட்டது. ஆனால் எங்களில் சிலருக்கு தபால் வாக்குகளை அதிகாரிகள் முறையாக வழங்காததால், வாக்களிக்க முடியாமல் இருந்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் விசாரணை செய்து பேராவூரணி தொகுதியில் எத்தனை தன்னார்வலர்கள் வாக்களிக்காமல் விடுபட்டுள்ளனர்,மற்ற சட்டமன்றத் தொகுதியிலும் இதுபோல் நிலை உள்ளதா என விசாரித்து தன்னார்வலர்கள் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tanjore district ,
× RELATED நேர்மையாக எனது வாக்கை செலுத்துவேன்...