×

அஞ்செட்டி அருகே சோகம் காவிரியாற்றில் மூழ்கி மருத்துவ மாணவர் பலி


தேன்கனிக்கோட்டை, ஏப்.8:  அஞ்செட்டி அருகே காவிரியாற்றில் மூழ்கி மருத்துவ மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் பரத்(24). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 5ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், தேர்தலையொட்டி சொந்த ஊருக்கு வந்து ஓட்டு போட்ட பரத், தனது நண்பர்களான ஓசூரை சேர்ந்த விக்னேஷ்(24) மற்றும் 3 பேருடன் அஞ்செட்டி அருகே உள்ள தப்பக்குளி என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது, திடீரென சுழலில் சிக்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால், நீரோட்டம் அதிகமாக இருந்ததால், அவர்களால் மீட்க முடியவில்லை. இதையடுத்து,  ஊர்மக்கள் உதவியுடன் பரத்தை மீட்டு அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த அஞ்செட்டி போலீசார், பரத்தின் சடலத்தை கைப்பற்றி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் குளிக்க சென்ற மருத்துவ மாணவர், காவிரியாற்றில் மூழ்கி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Anchetti ,
× RELATED வத்தல்மலை அடிவாரத்தில்...