×

கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கனிமொழி

சென்னை: கொரோனா சிகிச்சை பெற்று வந்த கனிமொழி குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுகவின் முன்னணி நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். திமுக மகளிர் அணி செயலாளரான கனிமொழியும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். தொகுதி வாரியாக சென்று திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இந்நிலையில், தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் 2ம் அலையால் நோய் தொற்று வேகமாக அதிகமாகி வருகிறது. இந்தக் காலகட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிகவின் பல வேட்பாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இறுதி கட்ட பிரசாரத்தில் கனிமொழி ஈடுபட்டிருந்தார். பின்னர் அவர் சென்னை திரும்பினார்.

அவருக்கு உடல் சோர்வு இருந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்தார். அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தேர்தல் பிரசாரம் முடிய ஒருநாள் இருக்கும் நிலையில், அவர் கொரோனா தொற்று காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் மருத்துவமனையிலிருந்து முழுக் கவச உடை அணிந்து வந்து வாக்களித்தார். பின்னர் மீண்டும் ஆம்புலன்ஸில் புறப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றார். இதனையடுத்து, கொரோனா சிகிச்சையில் குணமடைந்த காரணத்தால் கனிமொழி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்று வீடு திரும்பினார். அவரை மகளிர் அணியினர் வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். மருத்துவர்கள் ஆலோசனைப்படி கனிமொழி எந்தப் பணியிலும் ஈடுபடாமல், 5 நாட்கள் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்.

Tags : Kanimozhi ,
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...