×

சம்பள பேச்சுவார்த்தை துவக்கக்கோரி தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தல்

திருப்பூர், ஏப்.8: சம்பள ஒப்பந்த பேச்சு துவக்க, உற்பத்தியாளர் சங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க திருப்பூர் பனியன் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
 கடந்த 2016ல் போடப்பட்ட பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம், 2020 மார்ச் மாதம் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தம் குறித்து, தொழிற்சங்கங்கள் சார்பில், உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கருத்துரு அளிக்கப்பட்டது. கடந்த 2020 மே மாதம் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து, ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயக்கத்தை துவக்கின. ஆனாலும் உற்பத்தியாளர் சங்கங்கள் பேச்சுவார்த்தையை துவக்கவில்லை. தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்கள் நடத்தின. இதையடுத்து கடந்த பிப்ரவரி 22ம் தேதி, ஆடை உற்பத்தியாளர் சங்கங்கள்- பனியன் தொழிற்சங்கங்கள் இடையே முதல் சுற்று சம்பள ஒப்பந்த பேச்சு நடந்தது. முதல் சுற்று பேச்சுவார்த்தையில், உற்பத்தியாளர் சங்கத்தினர் தொழில் பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர். தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் பிரச்னைகளை முன்னிறுத்தி பேசினர். இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக, ஒப்பந்த பேச்சு நடைபெறவில்லை. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தொழிற்சங்கத்தினர் சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்க, உற்பத்தியாளர் சங்கங்களை வலியுறுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Trade union ,
× RELATED வங்கியில் பணியாற்றும் நகை...