×

போத்தனூர்-பொள்ளாச்சி இடையே ரயில் பாதைைய மின்மயமாக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி,ஏப்.8: பொள்ளாச்சி-போத்தனூருக்கிடையே அகல ரயில் பாதை தண்டவாளத்தில், மின் மயமாக்கும் பணியை ரயில்வே துறை தீவிரப்படுத்தியுள்ளது. கோவை போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல் ரயில்பாதை திட்டத்தில், கடந்த 2009 ஆண்டு துவங்கப்பட்ட அகல ரயில்பாதை பணியானது, 8 ஆண்டுகளில்  நிறைவுபெற்று, கடந்த 2015ம் ஆண்டு முதல் முதற்கட்டமாக திருச்செந்தூர், சென்னைக்கும், அடுத்ததாக சென்னை,பாலக்காடு, கோவை என பல்வேறு பகுதிகளுக்கும் அடுத்தடுத்து ரயில் சேவை துவங்கப்பட்டது.  இந்நிலையில் பொள்ளாச்சி வழியாக செல்லும் திண்டுக்கல், போத்தனூர் மற்றும் பாலக்காடு வரையிலான அகல ரயில் பாதையை மின்மயமாக்கி ரயில் சேவையை மேலும்  அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என, ரயில் பயணிகள் நல சங்கத்தினர் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்பினரும் தொடர்ந்து   கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, போத்தனூர்- திண்டுக்கல் மற்றும் பாலக்காடு வரையிலான அகல ரயில்பாதையை மின்மயமாக்கும் பணிக்காக சுமார் முன்று ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து சுமார் ஒன்றரை  ஆண்டுக்கு முன்பு, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, கிணத்துக்கடவு வழியாக கோவை போத்தனூர் வரையிலான  ரயில் பாதையில் மின்மயமாக்குவது தொடர்பாக, நவீன கருவி கொண்டு அளவீடு பணி நடைபெற்றது. அந்நேரத்தில், நவீன கருவிகொண்டு தண்டவாள வளைவு மற்றும் பாலம் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பின் சில மாதங்களிலேயே, போத்தனூரில் இருந்து பொள்ளாச்சி வரையிலும் சுமார் 40 கி.மீ தொலைவிற்கு மின்கம்பங்கள் அமைப்பதற்காக, ஆங்காங்கே கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது. கொரோனா ஊரடங்கால், பயணிகள் ரயில் சேவை சுமார் ஒரு ஆண்டுக்கு மேல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதமாக, மின் மயமாக்குவதற்கான ராட்சத கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. இப்பணி பெரும்பாலான இடங்களில் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.

அந்த மின் கம்பங்கள் சத்தீஷ்கர் மாநிலம் ராயப்பூரில்  இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது போத்தனூரிலிருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி வரை ஆங்காங்கே அமைக்கப்பட்ட கம்பத்தில், முறுக்கு மின் கம்பிகள் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது.இதற்காக, நவீன கருவிகள் இணைக்கப்பட்ட ரயில் பெட்டியின் மேல் பகுதியிலிருந்து, மின்கம்பிகளை சீர்படுத்தம் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது அப்பணி சுமார் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பொள்ளாச்சி ஜங்சன் பகுதியில் இன்னும் மின்மயமாக்குவதற்கான கம்பம் நடவில்லை.
இருப்பினும், மீதமுள்ள பணிகளை விரைந்து நிறைவு செய்து, மின்மயமாக்கல் பணியை துரிதமாக்க ரயில்வே அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மின்மயமாக்கல் பணியை விரைந்து நிறைவு செய்தால்,  பொள்ளாச்சி வழியாக வெளி மாவட்டங்களுக்கு  கூடுதல் விரைவு  ரயில் சேவை இருக்கும் என,  ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Bothanur-Pollachi ,
× RELATED போத்தனூர்-பொள்ளாச்சி இடையே ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி தீவிரம்