×

மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டு சீல்

ஈரோடு, ஏப். 8:  ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் வைத்து நேற்று சீல் வைக்கப்பட்டது.    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் 2,741 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. இதில், மாவட்டத்தில் 77.07சதவீதம் வாக்குகள் பதிவானது. தேர்தல் வாக்குப்பதிவு நேற்று இரவு 7 மணியுடன் நிறைவடைந்த உடன், வாக்குப்பெட்டிகள் அரசியல் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களின் முன்னிலையில், சீல் வைக்கப்பட்டு, அந்தந்த மண்டல அதிகாரிகள் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்களிடம் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற்று துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம், போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

   இதில், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும், கோபி, பவானிசாகர் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்டத்தில் மலைப்பகுதி மற்றும் ஊரக பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று அதிகாலை தான் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்து சேர்ந்தது. இதைத்தொடர்ந்து, அங்கு தொகுதிகள் வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைத்தனர்.

  இதைத்தொடர்ந்து 2 வாக்கு எண்ணிக்கை மையத்திலும் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் துப்பாக்கிய ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அங்கு பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் சிசிடிவி கேமரா மூலம் 24மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : District 8 Assembly ,
× RELATED ஈரோடு பகுதியில் இன்று மின்தடை