ஆறுமுகநேரி, ஏப்.8: சாலைகளில் சுற்றித்திரியும் கால்
நடைகளை கட்டுப்படுத்த கோரி ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆத்தூர் மெயின் பஜார், முக்கிய வீதிகள் மற்றும் பொதுஇடங்களில் மாடுகள் அதிகளவில் சுற்றி வருகின்றன. இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனை கண்டித்து நேற்று காலை 11 மணியளவில் ஆத்தூர் பஜார் வியாபாரிகள் சங்கத்தினர், யாதவர் சமுதாய மக்கள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து பேரூராட்சி நிர்வாக அதிகாரி மணிமொழிசெல்வன் ரெங்கசாமி, ஆத்தூர் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பேரூராட்சி மூலம் சாலைகளில் சுற்றிதிரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை உடனே எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் போராட்டத்தை விலக்கிகொண்டு கலைந்து சென்றனர். இதனால் ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது.