சாத்தான்குளம், ஏப்.8: சாத்தான்குளத்தில் பைக் திருடும் கும்பல் உலா வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் நாளுக்கு நாள் பைக் உள்ளிட்ட இதர வாகனகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வாகனங்கள் அத்தியாவசிய பொருளாகவும் மாறி வருகிறது. சாத்தான்குளத்தில் கடந்த வாரம் அடையாளம் தெரியாத நபர் கையில் 10க்கு மேற்பட்ட சாவியுடன் வந்துள்ளார். தச்சமொழியில் உள்ள ஓட்டல் அருகில் நின்ற பைக் ஒன்றை கள்ள சாவி போட்டு அவர் எடுத்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அருகில் இருந்தவர்கள் கவனித்து அவரை விசாரித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். அவர் தான் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் என கூறியதாக கூறப்படுகிறது. அவர் பல பைக் சாவியுடன் இப்பகுதியில் நடமாடி வருவதாக பொதுமக்கள் தரப்பில் காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பைக் திருட்டு நடக்காமல் இருக்க போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வர்த்தக சங்க செயலாளர் செல்வராஜ்மதுரம் கூறுகையில், சாத்தான்குளத்தை பொறுத்தவரை முக்கிய பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு காவல்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த வாரம் ஒரு நபர் சாவிகளுடன் வந்துள்ளார். தற்போது வாகனங்கள் தவணை முறையில் வாங்குவது அதிகரித்துள்ளது. இதனால் தவணை பாக்கி இருந்தால் அந்த நிறுவனமே பைக்கை எடுத்து செல்வது வாடிக்கையாக உள்ளது. தச்சமொழி ஓட்டல் அருகில் ஒரு பைக்கை எடுக்க முயன்றார். அவரை அப்பகுதியில் உள்ளவர்கள் கண்டித்து அனுப்பினர். அதன்பின் அவரை பின்தொடர்ந்ததில் வேறு பகுதியில் வாகனங்களை எடுக்கவில்லை. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். போலீசார் கண்காணிப்பு கேமராவை கண்காணித்து சந்தேகப்படும் வகையில் நடமாடும் நபர்களை விசாரிக்க வேண்டும்’ என்றார்.