மதுரை, ஏப்.5: மதுரை வடக்கு சட்டமன்றத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோ.தளபதி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் முக்கிய பிரமுகர்ளை சந்தித்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுகொண்டார். அவர் வார்டு வார்டாக சென்று வாக்கு சேகரித்தார். இறுதிகட்ட பிரசாரத்தை செல்லூர் 60 அடி ரோட்டில் துவங்கி நரிமேடு, தல்லாகுளம், அண்ணா பஸ் ஸ்டாண்ட், அண்ணாநகர், கே.கே.நகர், தாசில்தார் நகர், மேலமடை வழியாக சென்று யானை குழாயில் இரவு 7 மணிக்கு முடித்தார். சென்ற இடங்களில் எல்லாம் அவரது வாக்குறுதிகளை எடுத்துக் கூறினார்.
குறிப்பாக மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மேலமடை, தாசில்தார் நகர், கோமதிபுரம் பகுதிகளில் புதிய பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்தார். மேலும் நிரந்தர குடிநீருக்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதி கூறினார். மேலும் படிக்கும் திறனை மேம்படுத்த நூலக வசதி செய்யப்படும். முதியோர் மற்றும் விதவை பெண்களுக்கான உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிநவீன சமுதாயக்கூடம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதி அளித்தார். இவரை ஆதரித்து வைகோ, திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன், ஐ.லியோனி ஆகியோர் பிரசாரம் செய்தனர். பிரசாரத்தின் போது மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பொன்.சேதுராமலிங்கம் , பகுதி செயலாளர்கள் அக்ரி கணேசன், ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரசார், கம்யூனிஸ்ட் கட்சியினர், விசிகவினர் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்.