×

மேட்டுப்பாளையம் தொகுதியில் குளம்,குட்டைகளை தூர்வாரி நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் டி.ஆர்.எஸ்.சண்முகசுந்தரம் வாக்குறுதி

மேட்டுப்பாளையம்,ஏப்.5: மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.எஸ் சண்முகசுந்தரம் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் டி.ஆர்.எஸ்.சண்முகசுந்தரம் நேற்று இரவு 7 மணி வரை தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். காரமடை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்களில் கிராமங்கள் தோறும் வாகன பிரசாரம் மேற்கொண்ட அவர் உதய சூரியனுக்கு வாக்களிக்கும்படி கேட்டு கொண்டார். அப்போது காரமடை பகுதியில் வேட்பாளர் டி.ஆர்.எஸ்.சண்முக சுந்தரம் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: இப்பகுதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக சிறு,குறு வார்ப்பட தொழிற்சாலைகள் பல இயங்கி வந்தது.  சமீபகாலமாக மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக வார்பட தொழில் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. பெட்ரோல்,டீசல் விலைஉயர்வு காரணமாக போக்குவரத்து வாடகையும் உயர்ந்து சிறு,குறு தொழிற்கூடங்களும் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க முடியாமல் தொழிற்சாலைகள் திணறி வருவதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலை மாறி தொழில்துறை மேம்பட்டு மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கும், தமிழகத்தில் அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கும் திமுகவை ஆதரியுங்கள். மேட்டுப்பாளையம் தொகுதியில் உள்ள குளம்,குட்டைகளை தூர்வாரி நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன் மூலம் விவசாய பணிகள் மேம்படும். மேட்டுப்பாளையம் தாலுகாவில் விவசாயிகளின் மிகப்பெரிய பிரச்னையான மனித-வனவிலங்கு மோதல்  பிரச்னைக்கு விவசாயிகளை உள்ளடக்கிய வல்லுனர் குழு அமைத்து தீர்வு காண்பேன். நான் உறுதியளித்துள்ள திட்டங்களை நிறைவேற்றிடவும், ஆளுமை மிக்க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். இந்த தொகுதியின் அனைத்து பிரச்னைகளையும் அறிந்தவன் என்ற முறையில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் தொகுதிக்கு தேவையான வளர்ச்சிகள் பணிகள் செய்வதில் முக்கிய பங்காற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.பிரசாரத்தின் போது திமுக,காங்கிரஸ்,மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் உடன் சென்று உதய சூரியனுக்கு வாக்கு சேகரித்தனர்.புட்நோட்நீலகிரி மலை காய்கறிகள் மொத்த மார்க்கெட்டில் சுமைதூக்கும் கூலித் தொழிலாளர்கள் நேற்று மேட்டுப்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags : DRS ,Shanmugasundaram ,Mettupalayam ,
× RELATED சேலம் சிறையில் டிஐஜி ஆய்வு