நாகை, ஏப்.5: நாகை அருகே திருமருகலில், நாகை தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் முகமது ஷா நவாஸை ஆதரித்து நடந்த பிரசாரத்தின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:234 தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் ஜோதிடம் பார்ப்பவன் இல்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. ஒரு தேர்தலில் ஒரு அணி எப்படி வெற்றி பெறுகிறது. எப்படி வெற்றி வாய்ப்பை இழக்கிறது என்பதற்கு இரண்டு இலக்கணம் உள்ளது. ஒன்று அரசியல் பலம் இருக்க வேண்டும். மற்றொன்று அணியின் பலம் இருக்க வேண்டும். இந்த இரண்டும் சேர்ந்தே அமைந்தது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுகவிற்கு அரசியல் பலம் மிக மிக பலவீனமாக இருக்கிறது. அதன் காரணமாகத்தான் அரசியல் பேச மறுக்கிறார்கள்.
அதிமுக, பாஜக வுடன் கூட்டணி வைத்திருப்பது சரியா? நியாயம் தானா நீங்களே பதில் கூறுங்கள் நீங்களாக கூட்டணி வைக்கவில்லை.உங்களை மிரட்டி அடிபணிய வைத்து கூட்டணி வைத்து உங்களை பாஜக செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. தனியாக போட்டியிட்டால் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாத கட்சி பாஜக. அந்த கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொள்கிறது. அதிமுகவை எம்ஜிஆருக்கு பிறகு ஒரு நல்ல கட்சியாக வழிநடத்தியவர் ஜெயலலிதா அவர் இல்லையெனில் எடப்பாடி பழனிச்சாமியை யாருக்கும் தெரியாது என்றார்.