×

பெரியகுளம் பகுதியில் சூறாவளிக்கு 50 ஆயிரம் வாழை நாசம் அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

பெரியகுளம், ஏப். 3: பெரியகுளம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை வீசிய சூறாவளி காற்றுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான 50 ஆயிரம் வாழைகள் ஒடிந்து நாசமாகின. இது குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சொக்கதேவன்பட்டி, சக்கரைபட்டி, சாவடிபட்டி, வடபுதுப்பட்டி, கோம்பைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை சாகுபடி செய்திருந்தனர். நேற்று முன்தினம் மாலையில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 2 கோடி ரூபாய் மதிப்பிற்கும் மேலான சுமார் 50 ஆயிரம் வாழை மரங்கள் முற்றிலும் ஒடிந்து சேதமடைந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ‘வங்கிகளில் கடன் வாங்கி நகைகளை அடகு வைத்து பயிரிட்ட வாழையில் பிஞ்சு மற்றும் பூவாக உள்ள நிலையில், சூறாவளி காற்றினால் முழுவதும் சேதம் ஏற்பட்டுள்ளதால், தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு பாதிக்கப்பட்ட வாழை மரங்களை கணக்கெடுப்பு செய்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

Tags : Periyakulam ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி