கோவில்பட்டி, ஏப்.3: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கால்நாட்டு வைபவம் நடந்தது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பங்குனி பெருந்திருவிழா மிகவும் முக்கியமானதாகும். இந்தாண்டு பங்குனி பெருந்திருவிழாவுக்கான கால்நாட்டு வைபவம் நேற்று நடந்தது. இதையொட்டி கோயில்நடை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து 8 மணிக்கு விளாபூஜை, 9 மணிக்கு பந்தல்காலுக்கு அம்பாள் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பந்தல்கால் ரதவீதி வழியாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோயிலுக்கு முன்பு பங்குனி பெருந்திருவிழா நாட்கால் நடப்பட்டது. பூஜைகளை சுவாமிநாத பட்டர், செண்பகராம பட்டர் ஆகியோர் செய்தனர். பங்குனித்திருவிழா கொடியேற்றம் வரும் 5-ம்தேதி காலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. 13-ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. 14-ம் தேதி தீர்த்தவாரியும், 15ம்தேதி தெப்ப தேரோட்டமும் நடக்கிறது. பந்தல்கால் நடும் விழாவில் கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) சிவகலைபிரியா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.