புதுச்சேரி, ஏப். 3: புதுச்சேரியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். அவரது வருகையால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார். ராகுல் காந்தியுடன் 28ம்தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காரைக்கால், புதுச்சேரி முழுவதும் இன்று சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். நாகையில் பிரசாரத்தை முடித்துவிட்டு மாலை 3.30 மணிக்கு காரைக்கால் வந்தடையும் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து தனது பிரசாரத்தை தொடங்குகிறார். காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, திருநள்ளாறு, நிரவி- திருப்பட்டினம், நெடுங்காடு தொகுதி வேட்பாளர்களான நாஜிம், ஏவி சுப்பிரமணியன் உள்ளிட்ட 5 வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
பின்னர் மாலை 5.30 மணிக்கு புதுச்சேரி வந்தடையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மண்ணாடிப்பட்டில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அங்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் ஏ.கே.குமாருக்கு ஆதரவு திரட்டுகிறார். அதைத் தொடர்ந்து திருபுவனை, ஊசுடு, மங்கலம், வில்லியனூர், உழவர்கரை, கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி, காமராஜர் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்ைட, ராஜ்பவன், உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் மதச்சார்பற்ற அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். திமுக வேட்பாளர்களான சிவா, எஸ்பி சிவக்குமார், கோபால், கார்த்திகேயன், செந்தில்குமார் உள்ளிட்டோருக்கு மக்களை சந்தித்து ஆதரவு கேட்கிறார். மு.க.ஸ்டாலின் புதுச்சேரி வருகையால் திமுக வேட்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.