×

தர்மபுரி அருகே கூடைப்பந்து பயிற்சியாளர் வீட்டில் 14 பவுன் நகை கொள்ளை

தர்மபுரி, ஏப்.3: தர்மபுரி அருகே கூடைப்பந்து பயிற்சியாளர் வீட்டு பூட்டை உடைத்து 14 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே புலிக்கரை கோயிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் பழனி(31). இவர், பெங்களூருவில் பள்ளி மற்றும் கல்லூரியில் கூடைப்பந்து வளையாட்டு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 24ம் தேதி மகனை பார்ப்பதற்காக மனோகரன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூரு சென்றார்.  அங்கிருந்து நேற்று ஊருக்கு திரும்பினார். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த மனோகரன் வீட்டுக்குள் சென்றார். அங்கு பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில், வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. உள்ளே இருந்த வளையல்கள், செயின், மோதிரம், தங்க நாணயம் என மொத்தம் 14 பவுன் நகையை காணவில்லை.

இதுகுறித்து மதிகோன்பாளையம் காவல்நிலையத்தில் மனோகரன் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். இதில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags : Dharmapuri ,
× RELATED கற்கள் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்