ஈரோடு, ஏப். 3: உங்களுக்கு சேவையாற்ற காத்திருக்கும் மண்ணின் மைந்தனாகிய எனக்கு வாக்களியுங்கள் என்று ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா கேட்டுக்கொண்டுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா நேற்று அருள்வேலன் நகர், பாரதிநகர், ஞானபுரம், காந்திநகர், நக்கீரர் வீதி, பாரிவீதி, கச்சேரி வீதி,குயன்வன் திட்டு, சீதக்காதி வீதி, உப்புக்கிணறு சந்து உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் திருமகன் ஈவெரா பேசியதாவது: நான் பிறந்தது, வளர்ந்தது ஈரோட்டில் தான். எனக்கும் குடும்பத்தினர் ஓட்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தான் உள்ளது. ஆனால் தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் தவறான பிரசாரத்தை செய்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வசிக்கும் உங்களுக்கு சேவையாற்ற காத்திருக்கும் மண்ணின் மைந்தன், தொகுதியின் மைந்தானிய எனக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடிப்படை வசதிகள் கூட கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக கழிவு நீர் பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளதால் சுற்றுச்சூழல் மட்டுமல்லாது ஜவுளித்தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது. சாலைகள் ஆங்காங்கே பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு உள்ளது. குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது. நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அரசு வழங்கும் சம்பளத்தை தவிர வேறு எந்த வகையிலும் பயன் பெற மாட்டேன் என்பதை உங்களிடம் உறுதியளிக்கிறேன். உங்கள் கோரிக்கைகள், குறைகளை தெரிவிக்க நீங்கள் என்னை தேடி வர வேண்டாம். நான் உங்களை தேடிவருவேன். இவ்வாறு திருமகன் ஈவெரா பேசினார்.