×

பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது 2 பேர் தப்பி ஓட்டம் ஆரணி அருகே துணிகரம்

ஆரணி, ஏப்.3: ஆரணி அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் பிடிபட்டார். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சி இபி நகரை சேர்ந்தவர் மனோகரன், ஆம்பூர் சர்க்கரை ஆலையில் பீல்ட் ஆபீஸர். இவரது மனைவி ஜான்சிராணி(42). நேற்று, மனோகரன் தனது மனைவியுடன் இரும்பேடு பகுதியில் உள்ள அரிசி ஆலைக்கு சென்றுவிட்டு, பைபாஸ் சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.ராட்டிணமங்கலம் பைபாஸ் சாலை தனியார் திருமண மண்டபம் அருகே வரும்போது, பின்தொடர்ந்து பைக்கில் வந்த 3 நபர்களில் ஒருவர் திடீரென ஜான்சிராணியின் கழுத்தில் இருந்த 4 சவரன் செயினை பறிக்க முயன்றார். சுதாரித்து கொண்ட ஜான்சிராணி மர்ம நபரின் கையை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார்.

இதனால் செயினை விட்டுவிட்டு மர்ம நபர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்ப முயன்றனர். அப்போது, அவ்வழியாக வந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் டிரைவராக பணிபுரியும் செல்வம் என்பவர், மர்ம நபர்களை விரட்டி சென்றார். இதில், நிலை தடுமாறிய மர்ம நபர்களின் பைக் கீழே விழுந்தது. 2 பேர் தப்பியோடிய நிலையில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். தொடர்ந்து, ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், ஆரணி டவுன் நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த மணி மகன் அரிஹரன்(20), என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜான்சிராணி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அரிஹரனை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 2 பேரையும் தேடிவருகின்றனர்.

Tags : Arani ,
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...