உடன்குடி,ஏப்.2: கொரோனா 2ம் கட்ட பரவல் தற்போது துவங்கியுள்ளது. இதையடுத்து இதை தடுக்கும்பொருட்டு குலசேகரன்பட்டினம் காரைக்காலம்மையார் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி காரைக்கால் அம்மையார் பேயுருவம் பெற்ற மண்டபத்தில் நெல்லை காரைக்கால் அம்மையார் பக்த சிவ வழிபாட்டுக் குழு சார்பில் அம்மையாரின் பாடல்களாகிய அற்புதத் திருவந்தாதி, மூத்தத்திருப்பதிகம், திரஇரட்டை மணிமாலை, பெரியபுராணத்தில் உள்ள பதிகப்புராணம் ஆகியன முற்றோதுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு வழிபாடு மற்றும் மகேஸ்வர பூஜையைத் தொடர்ந்து நாட்டில் கொரோனா தாக்கம் மேலும் பரவாமல் குறைந்திட கூட்டுப்பிரார்த்தனை, திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டப் பதிகம் முற்றோதுதல் நடந்தது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.