×

நாங்குநேரி தொகுதியில் வெற்றி பெற்று சிறந்த எம்எல்ஏவாக ரூபி மனோகரன் செயல்படுவார் திண்ணை பிரசாரத்தில் தினேஷ் குண்டுராவ் பேச்சு

நெல்லை, ஏப். 2: நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வெற்றிபெற்று, சிறந்த எம்எல்ஏவாக செயல்படுவார் என்று, நாங்குநேரி அருகே நடந்த திண்ணை பிரசாரத்தில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேசினார். நாங்குநேரி தொகுதியில், போட்டியிடும் தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவுடன் இணைந்து நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட குன்னத்தூர், பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் திண்ணை பிரசாரம் செய்தார். திரளான கிராம மக்கள் பங்கேற்றனர். அப்போது ரூபி மனோகரன் பேசியதாவது: நான் பிறந்து, வளர்ந்ததும் குன்னத்தூர் தான். இந்த குன்னத்தூர் அல்ல. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். அங்கே தான் 8ம் வகுப்பு வரை படித்தேன். என்னுடைய குடும்பமும் ஏழ்மையானதுதான். காமராஜர் கொடுத்த இலவச கல்வியையும், இலவச மதிய உணவையும், இலவச சீருடையையும் கொண்டே கல்வி கற்று, வாழ்வில் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன்.

கடந்த ஒன்றரை வருடங்களாக உங்களை சுற்றிச்சுற்றி வருகிறேன். ஒரு கிராமம்கூட விடவில்லை. உங்களின் தேவைகளையும் அறிந்துகொண்டேன். அதனால், உங்களுக்காகவே நாங்குநேரியிலேயே வீடு வாங்கி, செட்டிலாகி விட்டேன். தொகுதி மக்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறேன். பெண்களுக்கான மருத்துவ முகாம் நடத்தி இருக்கிறோம். கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த அனைவருக்கும் அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கி இருக்கிறோம். இளம்தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாளில் தொகுதி முழுவதும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டிருக்கிறோம். உங்கள் இன்னும் நிறைய உதவிகள் செய்ய ஆசைப்படுகிறேன். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித வளர்ச்சியும் இல்லை. அரசு வேலை, கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கவில்லை. இவர்களால், நாம் ஒரு தலைமுறை வளர்ச்சியை இழந்து நிற்கிறோம்.

நல்லாட்சியைத் தருவார்கள் என்று நம்பி ஏமாந்தது போதும். ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவோம். இந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி. அதேபோல், மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். ராகுல்காந்தி பிரதமர் ஆவார். நாங்குநேரியை தமிழகத்தில் சிறந்த தொகுதியாக மாற்ற ஏப்ரல் 6ம்தேதி, மறக்காமல் கை சின்னத்திற்கு வாக்களியுங்கள். இவ்வாறு ரூபி மனோகரன் பேசினார். தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேசுகையில், ரூபி மனோகரன், மிகச்சிறந்த மக்கள் நலப்பணிகள் செய்யக்கூடியவர். அவர், நாங்குநேரி தொகுதியில் வெற்றிபெற்று, தமிழகத்தில் சிறந்த எம்எல்ஏவாக செயல்படுவார். அனைவரும் அவருக்கு ஆதரவு கொடுங்கள். மறக்காமல் கை சின்னத்திற்கு வாக்களித்து, அவரை அமோக வெற்றிபெறச் செய்யுங்கள்” என்றார். மாலையில், தொகுதிக்கு உட்பட்ட முன்னீர்பள்ளம், மருதப்பபுரம், ஆரைக்குளம், அரண்மனைநகர், தருவை, கண்ணடித்தான்குளம், ஆலங்குளம், பூக்குழி, திடியூர் உள்ளிட்ட கிராமங்களில் ரூபி மனோகரன் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

Tags : Ruby Manokaran ,Nanguneri ,Dinesh Kundurav ,Thidi Prasil ,
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...