திருவொற்றியூர்: மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மாதவரம் வி.மூர்த்தி மற்றும் ஆவடி தொகுதி வேட்பாளர் மா.பா.பாண்டியராஜன், பொன்னேரி தொகுதி வேட்பாளர் சிறுனியம் பலராமன், கும்மிடிப்பூண்டி தொகுதி பாமக வேட்பாளர் பிரகாஷ் ஆகியோரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாதவரம் பஜார் தெருவில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பொதுமக்களிடையே பேசியதாவது: கல்விலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உயர் கல்வியில் 149 பேர் பயின்று வருகின்றனர். நீட் தேர்வு மற்றும் மருத்துவ படிப்பில் 435 பேர் தேர்ச்சி பெற்று மருத்துவராக பணியில் உள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரி நீரை சேமித்துள்ளோம்.
சென்னையின் தண்ணீர் பிரச்னையை தீர்த்துள்ளோம். எனவே அதிமுக அரசு தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக மாதவரம் வி.மூர்த்தி முன்னிலையில், மாதவரம் குடியிருப்போர் நல சங்கங்களில் கூட்டமைப்பு தலைவர் நீல கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் இஸ்லாமியர்களுக்கு இடுகாடு அமைத்து தரவேண்டும், ரெட்டேரியை தூர்வாரி சுற்றுலா தளமாக்க வேண்டும், தட்டாங்குளம் சாலை அருகே ஜிஎன்டி சாலையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றப்படும், என்றார்.