×

கடமலை-மயிலை ஒன்றியத்தில் டூவீலர் திருட்டு அதிகரிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வருசநாடு, ஏப். 2: கடமலை-மயிலை ஒன்றியத்தில் டூவீலர் திருட்டு அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள வருசநாடு மற்றும் கடமலைக்குண்டு பகுதியில் சமீபகாலமாக டூவீலர் திருட்டு அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன், கடமலைக்குண்டுவைச் சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான டூவீலர் திருடு போனது. இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார். இப்பகுதியில் திருடு போகும் டூவீலர் குறித்து பலர் போலீசில் புகார் செய்வதில்லை என கூறுகின்றனர். பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் டூவீலர் திருடு போகிறது. டாஸ்மாக் கடைகளில் நிறுத்தப்படும் டூவீலர்கள், இரவு நேரங்களில் வீடு முன் நிறுத்தப்படும் டூவீலர்கள் அதிகமாக திருடு போகின்றன. இதேபோல, வருசநாடு பகுதியிலும் டூவீலர் திருட்டு நடக்கிறது.இது குறித்து கடமலைக்குண்டு சமூக ஆர்வலர் கேபிள் மணி கூறுகையில், ‘கடமலை மயிலை ஒன்றியத்தில், சமீபகாலமாக டூவீலர் திருட்டு அதிகரித்து வருகிறது. திருட்டில் ஈடுபடுவது உள்ளூர் திருடர்களா? அல்லது வெளியூர் திருடர்காளா என தெரியவில்லை. எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து, திருடர்களை கைது செய்து, டூவீலர் திருட்டை தடுக்க வேண்டும்’ என்றார்.


Tags : Katamalai ,Mayilai ,
× RELATED முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11...