×

திமுக ஆட்சி அமைந்தவுடன் தொகுதி மக்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் உறுதி

திருப்புத்தூர், ஏப்.2: திருப்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ, நெற்குப்பை பேரூராட்சி மற்றும் எஸ்.புதூர் ஒன்றிய கிராமப்பகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘விவசாயிகளுக்கு எதிராக பாஜ அரசு புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தபோது, அதற்கு அதிமுக அரசு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் திமுக எம்பி.க்கள் எதிராக வாக்களித்தனர். தொடர்ந்து 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த போது, மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படாமல், மத்திய அரசுடன் கைகோர்த்துக் கொண்டு தமிழக மக்களுக்கு துரோகம் விளைவித்தது அதிமுக அரசு. ஆனால் இன்று தேர்தல் வந்தவுடன் மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போல் தங்களை காட்டிக்கொள்கிறார்கள் அதிமுகவினர். தமிழக மக்களை பற்றி எந்த கவலையும் படாமல், தங்களது ஆட்சியை பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அதிமுக எடப்பாடி அரசு. இந்த 15 ஆண்டுகாலத்தில் என்னுடைய சட்டமன்ற நிதியின் மூலம் தொகுதியில் உள்ள பல கிராமங்களில் ஏராளமான பணிகளை நான் செய்துள்ளேன். தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தவுடன், தொகுதி மக்களின் தேவைகள், கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றி வைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன். மூன்று முறை தந்த வெற்றியைப்போல, நான்காவது முறையும் உங்களை நாடி வந்துள்ள உங்களில் ஒருவனாகிய எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்’’ என்றார்.


Tags : DMK ,KR Periyakaruppan ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி