×

குன்னூரில் திமுக வேட்பாளர் ராமசந்திரன் சூறாவளி பிரசாரம்

ஊட்டி, ஏப்.2: குன்னூர் நகர் மற்றும் இளித்தொரை, எடப்பள்ளி, போன்ற பகுதியில் திமுக வேட்பாளர் ராமசந்திரன் நேற்று வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமசந்திரன் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னூர் மற்றும் கோத்தகிரி ஒன்றியம் மற்றும் நகர பகுதிகளில் தினமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். குன்னூர் நகர் மற்றும் இளித்தொரை, எடப்பள்ளி, வண்டிச்சோலை, கோடமலை, அளக்கரை பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுகர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். தேர்தலில் திமுக வெற்றி பெற்று தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், படுகர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளை காக்கும் வகையில், பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ஆதார விலையாக ரூ.30 பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் உயர்கல்வி பெறும் வகையில் குன்னூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குன்னூர் நகரில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைத்து வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார். இப்பிரசாரத்தில், குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பெள்ளி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லாரன்ஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Ramachandran ,Coonoor ,
× RELATED அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி