×

ஒவ்வொரு ஊராட்சி அலுவலகத்திலும் இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும்

புதுக்கோட்டை, ஏப். 1: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி அலுவலகங்களிலும் இணையதள வசதி ஏற்படுத்தி கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 10க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், 497 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் இணையதளம் என்பது உணவு பொருட்களை போல அத்தியாவசிமாகி விட்டது. படிப்பு, பொது அறிவு என அனைத்தையும் இணையதள வசதியிருந்தால் ஒரு நொடியில் தெரிந்து கொள்ளலாம். இணையம் இல்லாமல் இனி வாழ்க்கை இல்லை என்ற அளவுக்கு வளர்ந்து விட்டது.

ஆனால் கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இன்று வரை இணையதள வசதி எட்டா கனியாக தான் உள்ளது. இதனால் அவர்கள் படிப்பில் சந்தேகம் மற்றும் பொது அறிவு குறித்து தெரிந்து கொள்ள முடியவில்லை. படிப்பு சம்மந்தமாக இணையதளத்தில் தேடி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கான வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதனால் கிரமங்களில் உள்ள மாணவர்களின் வசதிக்காக ஊராட்சி அலுவலகங்களில் ஒரு கம்ப்யூட்டரில் இணையதள வசதியை ஏற்படுத்தி கொடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த மாணவர்கள் கூறியதாவது: ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி அலுவலகங்கள் உள்ளது.

இந்த அலுவலகத்தில் இணையதள வசதியை ஏற்படுத்தி தந்தால் படிப்புக்கு தேவையான தகவல்களை பதிவிறக்கம் செய்து புதிது புதிதாக தெரிந்து கொள்ள முடியும். இதேபோல் போட்டி தேர்வுகளுக்கு கிராமங்களில் இருந்து மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு கண்டிப்பாக இணையதள வசதி வேண்டும். இதனால் கிராமங்களில் இருந்து நகர் பகுதியில் உள்ள பிரவுசிங் சென்டர்களை தேடி செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே ஒவ்வொரு ஊராட்சி அலுவலகங்களிலும் இணையதள வசதி ஏற்படுத்தி கொடுத்தால் நாங்கள் பெரிதும் பயன்பெறுவோம். இதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது