காரைக்கால், ஏப். 1: அரசு, உள்ளாட்சி, அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவுத்துறை ஊழியர்களின் ஊதியம், பதவி உயர்வு, பணி நிரந்தரம், கருணை அடிப்படையிலான பணி, தினக்கூலியாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அரசு ஊழியர் சம்மேளனம் மற்றும் சம்மேளனத்தின் இணைப்பு சங்கங்களின் சார்பில் அனுப்பப்பட்டு பல மாதங்களாகியும் அந்த மனுக்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புதுச்சேரி மாநிலத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட துணை நிலை ஆளுநர் அரசு, உள்ளாட்சி, அரசு சார்பு நிறுவனம் மற்றும் கூட்டுறவுத்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் அடங்கிய 75 கடிதங்கள் 2020ம் ஆண்டு முதல் அனுப்பப்பட்டு அவைகள் பெட்டிசன் மானிட்டரி சிஸ்டம் (Petition Monetary System) வாயிலாக பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டு அதில் 4 கடிதங்களுக்கு மட்டுமே இதுவரை பதில் வந்துள்ளது,
மீதமுள்ள 71 கடிதங்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அந்த மனுக்களை அப்படியே கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காரை பிரதேச அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் அரசு ஊழியர்களின் 71 கோரிக்கை மனு சம்பந்தமான தகவல்களை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி வைப்பது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீது ஆய்வு செய்து ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்த்து வைக்க வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் சம்மேளன தலைவர் சுப்ரமணியன், கவுரவ தலைவர் ஜார்ஜ், பொது செயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.