×

மேட்டுப்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் கிராமங்களில் தீவிர பிரசாரம்

மேட்டுப்பாளையம், ஏப்.1:மேட்டுப்பாளையம் தொகுதி மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம் நேற்று காரமடை கிழக்கு ஒன்றிய ஊராட்சியில் உள்ள பள்ளேபாளையம் ஜடையம்பாளையம் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:கொரோனா நோய்த் தொற்றை காரணம் காட்டி அத்தியாவசியப் பொருட்கள் விலை பன்மடங்கு உயர்ந்த நிலையில் ஒவ்வொரு ஏழை எளிய மக்களின் கடன் சுமை கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.குறிப்பாக, காரமடை கிழக்கு ஒன்றிய கிராமங்களில் நெசவு தொழிலாளர்கள் அதிகம் உள்ளார்கள். இங்கு நெசவுத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கினால் எங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்கிறேம் என அதிமுக அரசுக்கு நெசவாளர்கள் கோரிக்ைக விடுத்தும் கண்டுகொள்ளவில்லை.

அதேபோல், கடந்த ஆண்டு 400 ரூபாய்க்கு விற்ற காஸ் சிலிண்டர் விலை இன்று ஆயிரத்தை நெருங்குகிறது. நான்கரை ஆண்டு ஆட்சியில் உள்ள ஆட்சியாளர்கள் சிலிண்டர் விலை குறைக்க நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் எங்களை ஆட்சியில் அமர வைத்தால் இலவச காஸ் சிலிண்டர் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். இதை மக்கள் நம்பமாட்டார்கள். மீண்டும் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இந்த தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலினை அமர்த்த உள்ளனர். திமுக தலைமையிலான ஆட்சி பதவியேற்றவுடன் ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிக்கபட்டுள்ளன.

குறிப்பாக, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, குடும்ப பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை, கலைஞர் பிறந்தநாள் அன்று கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆகவே, தமிழகத்தில் திமுக தலைமையிலான நல்லாட்சி அமைந்திட எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்இவ்வாறு அவர் பேசினார். இதில், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் புருஷோத்தமன், பள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் பெருமாள், ம.தி.மு.க. நிர்வாகி பி.என். ராஜேந்திரன். விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி குப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mettupalayam ,DMK ,Shanmugasundaram ,
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது