பரமக்குடி, ஏப்.1: நயினார்கோவில் ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்யப்படும் என, பரமக்குடி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் வாக்குறுதி அளித்தார்.பரமக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் எம்எல்ஏ பரமக்குடி நகர் பகுதிகளான பொன்னையாபுரம், பாலன் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘நகர் பகுதிகளில் வாறுகால் வசதிகள் மேம்படுத்தப்பட்டு கழிவுநீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நயினார் கோவில் ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்யப்படும்.
நயினார்கோவில் சந்தை விரிவுபடுத்தப்பட்டு நிரந்தர கடைகள் அமைக்கப்படும். புனித ஸ்தலமான நாகநாதசுவாமி கோயில் பக்தர்கள் தங்குவதற்கு மண்டபம் அமைக்கப்படும். கோவில் முன் பகுதியில் உள்ள தெப்பக்குளம் தூர்வாரப்பட்டு உள்ளது. பக்தர்களின் வசதிக்காக படிக்கட்டுகளுடன் கரைகள் சீர் செய்யப்படும். மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட பொழுது உடனடியாக நிவாரணம் அளித்தது அதிமுக அரசு, வங்கிகளில் விவசாய கடன்களை ரத்து செய்தது அதிமுக அரசு, ஆகையால் உங்களுக்கு மீண்டும் சேவை செய்ய வாய்ப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என தெரிவித்தார்.
பிரசாரத்தில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, ஒன்றிய அவைத்தலைவர் சுந்தரராஜ், நயினார்கோவில் ஒன்றிய தலைவர் வினிதா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.