சாயல்குடி, ஏப்.1: ஆடு வளர்ப்போர் நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதுகுளத்தூர் அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி வாக்குறுதியளித்தார். முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி கருங்குளம், கே.கரிசல்குளம், பெரியகுளம், எருமைகுளம், கரிசல்புளி, அரியமங்கலம், பெருநாழி, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘ஆடு வளர்ப்போர் நல வாரியம் அமைக்கப்படும். மந்தை வளர்ப்பு செம்மறி ஆடுகளுக்கு இன்சூரன்ஸ், கால்நடை வளர்ப்போருக்கு வங்கி கடன், மருத்துவ காப்பீடு பெற்று தரப்படும்.
குண்டுகுளம், சீமனேந்தல் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு கூடுதல் நேரம் டவுன் பஸ் இயக்கப்படும். அனைத்து கிராமத்திற்கும் தடையின்றி குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படும். பெருநாழியில் விதை நெல் சுத்திகரிப்பு நிலையம், விதைகள் விற்பனை மையம் அமைக்கப்படும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படும். சூரியகாந்தி, மல்லி, மிளகாய் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். பெருநாழி, முத்துசெல்லையாபுரம் வழித்தடத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடிக்கு கூடுதல் பஸ் இயக்கப்படும். கிராமங்களில் நாடகமேடை, சமுதாய
கூடம் கட்டி தரப்படும்’’ என வாக்குறுதியளித்தார். பிரச்சாரத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் காளிமுத்து மற்றும் அதிமுக, பாஜ உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.