மதுரை, ஏப்.1: மதுரை தெற்கு தொகுதி மதிமுக வேட்பாளர் புதூர் பூமிநாதனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசும்போது, ‘‘விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மாணவர்களின் கல்வித்தரம் அனைத்தையும் அதலபாதாளத்துக்கு கொண்டு சென்ற அதிமுக அரசை விரட்டியடிக்க வேண்டும். அதற்கு மதிமுக திமுகவோடு சேர்ந்து போராடுகிறது. பொதுமக்கள் கொடுங்கோல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மதுரை தெற்கு தொகுதியில் புதூர் பூமிநாதனுக்கு வாக்குகள் அளித்து, அவரை சட்டசபைக்கு அனுப்புங்கள்.
மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதியும் செய்து தராத அதிமுக அரசு எம்எல்ஏ எங்கு இருந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளபடி அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு பெற்றுத் தருவார். எனவே அவரை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்’’ என வைகோ பேசினார். இந்த பிரசாரத்திற்கு பிறகு, தொகுதிக்குள் பல்வேறு இடங்களுக்கு சென்று பெண்கள் உள்ளிட்ட பலரிடமும் புதூர் பூமிநாதன் வாக்குகள் சேகரித்தார். மதிமுக மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ், ரமேஷ், தெற்கு சட்டமன்ற திமுக தேர்தல் பொறுப்பாளர் மதிச்சியம் வேல்முருகன், திமுக பகுதி செயலாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் சென்றனர்.