×

அமைச்சர் அன்பழகன் முன்னிலையில் தேமுதிகவினர் 200 பேர் அதிமுகவில் இணைந்தனர்

பாலக்கோடு, ஏப்.1: பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.பி.அன்பழகன், தனது தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அனுமந்தபுரம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்ற போது, தேமுதிக ஒன்றியக் குழு உறுப்பினர் கண்ணம்மாள், பன்னீர்செல்வம் தலைமையில், மாற்று கட்சிகளை சேர்ந்த 200பேர், அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மக்களுக்கான நல்லாட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சி தொடர வேண்டும். அதிமுக அறிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும், மீண்டும் அரசு அமைந்தவுடன் நிறைவேற்றப்படும். பெண்களுக்கான பல்வேறு அறிவிப்புகள், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில், அதிமுக அரசு கொண்டு வந்த சாதனை திட்டங்கள், நமக்கு வெற்றி வாய்ப்பை தேடி தரும். இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார். இந்நிகழ்ச்சியில், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவி சங்கர், கூட்டுறவு சங்க தலைவர் சண்முகம், துணை தலைவர் குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் லீலாவதி பாஸ்கர், தீபா சுகுமார், பன்னீர்செல்வம், அமுதா நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK ,Minister ,Anpalagan ,
× RELATED அண்ணாமலை என்ன ஜோசியரா?: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி