தூத்துக்குடி, ஏப்.1: தூத்துக்குடி மட்டக்கடை சொர்ண விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை சிவாச்சாரியார்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் வஉசி. கல்விக்கழகத்தின் செயலாளர் ஏபிசிவீ. சொக்கலிங்கம், ஏபிசிவீ. சண்முகம், கல்லூரி முதல்வர் வீரபாகு உள்ளிட்டவர்களும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், தூத்துக்குடி மேலூர் தெப்பக்குளம் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் கொடை உற்சவ விழா நடந்தது. இதனை முன்னிட்டு, நேற்று சுந்தரபாண்டிய விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து ரதவீதி சுற்றி கோயிலை சென்றடைந்தது. தொடர்ந்து கும்பாபிஷேகம், மதியக்கொடை விழா, கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி தீபராதனை நடந்தது. இரவு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 12 மணிக்கு சாமக்கொடை விழாவும், சிறப்பு அலங்கார தீபராதனையும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாக அதிகாரி சாந்தி தேவி, சதாசிவ பட்டர், குரு கைலாச பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.